Sunday 12 June 2016

தசஹரா புண்ணிய காலம்!



ராவண வதத்தை முடித்துவிட்டுத் திரும்பிய ராமபிரான், போரினால் விளைந்த பாவங்களைத் தீர்க்க கைலாசபதியான பரமேஸ்வரனை இராமேஸ்வரத்தில் வழிபட்டார். ஜ்யேஷ்ட மாதம், சுக்ல பட்சம், தசமி திதி, புதன்கிழமை, ஹஸ்த நட்சத்திரம், கரானந்தம், வியதீபாதம், கன்யா ராசியில் சந்திரனும், ரிஷபத்தில் சூரியனும் அமைந்திருந்த நாளில் இராமபிரான் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஸ்ரீஸ்காந்தம் கூறுகிறது .ஜ்யேஷ்டம் என்பது வைகாசி. ஜூன் மாத பௌர்ணமியில் தொடங்கும் சாந்த்ரமான மாதமாகும். அன்றைய நட்சத்திரம் கேட்டையாக இருக்கும்.

ஜ்யேஷ்ட மாத சுக்லபட்ச தசமியில் ஹஸ்த நட்சத்திரம் சேர்ந்து வருவது தசஹரா எனும் புண்ணிய காலம் எனப்படுகிறது. இந்த புண்ணிய காலத்தில்தான் ஸ்ரீராமர் ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.

பத்துவித பாவங்களைப் போக்கவல்ல புண்ணிய காலமான இந்நாளில் சேது தரிசனம் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரவல்லது. கடுஞ்சொல், உண்மையில்லாத சொல், அவதூறு, அறிவுக்குப் பொருந்தாத பேச்சு- இவை நான்கும் வாக்கினால் செய்கிற பாவங்களாகும்.

நமக்கு அளிக்கப்படாத பொருட்களை நாமாகவே எடுத்துக்கொள்வது, பிறரை அநியாயமாகத் துன்புறுத்துவது, பிறர்மனை நாடுவது- இவை மூன்றும் சரீரத்தால் செய்யப்படும் பாவங்கள்.

மற்றவர் பொருளுக்கு ஏங்குதல், மனதில் கெட்ட எண்ணங்களை  வளரவிடுதல், பொருட்களிடமும் மனிதர்களிடமும் பொய்யான பற்றுக் கொள்ளுதல்- இவை மூன்றும் மனதால் இழைக்கப்படும் பாவங்களாகும்.

சேதுவில் நீராடியவருக்கு இந்த பத்துப் பாவங்களும் தீர்ந்துவிடும். இந்தப் பத்துப் பாவங்களையும், புண்ணிய காலங்களில் சேதுவில் நீராடிக் கரைத்துவிடலாம் என்பதனாலேயே, ராஜமார்த்தாண்டம் எனும் நூல் சேது தீர்த்தத்தை தசஹரா என்கிறது.

ஒவ்வொரு வருடமும் சேதுவுக்குச் செல்ல முடியாதவர்கள், அப்புண்ணிய காலத்தில் நம் ஊரிலுள்ள நீர் நிலைகளில் அல்லது வீட்டுக் குளியலறையில்கூட சங்கல்பம் செய்துகொண்டு, பிரார்த்தனை கூறி நீராடினால் பத்துப் பாவங்களும் பறந்தோடிவிடும்.

சங்கல்பம்


"மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்... நாம ஸம்வத்ஸரே, ஜ்யேஷ்டமாஸே, சுக்ல பக்ஷே, தசம்யாம், சுபதிதௌ, மம தசவித பாபக்ஷயார்த்தம் அஸ்மின் ஸ்னானக்ருஹே, தசஹரா புண்யகாலே ஸ்னான மஹம் கரிஷ்யே.'பிரார்த்தனை

"விஷ்ணு பாதார்க்ய ஸம்பூதே கங்கே த்ரிபதகாமினி
தர்மத்ரவேதி விக்யாதே பாபம் மேஹர ஜாஹ்னவி
ச்ரத்தயா பக்தி ஸம்பன்னே ஸ்ரீமாதா தேவி  ஜாஹ்னவி
அம்ருதேனாம்பனா தேவி பாகீரதி புனாஹிமாம்.'


நீராடியபின், இதுவரை செய்யப்பட்ட பத்து வகையான பாவங்கள் கரைந்துவிட்டன என்று நம்புவதும், இனிமேல் அவற்றைச் செய்ய மாட்டேன் என்று உறுதிபூணுவதும் அவசியமானதாகும்.





No comments:

Post a Comment