Sunday 12 June 2016

ஐஸ்வர்யம் கொழிக்கும் வாழ்வருளும் ஐஸ்வர்யக் கோலம்!




ஐஸ்வர்யக் கோலம் என்பது செல்வத்தை அளிக்கும் கோலம் மட்டுமல்ல; அது கோலம் என்பதையும் தாண்டி ஸ்ரீசக்கரம் போன்ற ஒரு எந்திரம்! அதில் பல அற்புதமான தத்துவங்கள் அடங்கியுள்ளன. "ஐஸ்வர்யம் கொழிக்கும் வாழ்வை- அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உன்னதமான வாழ்க்கையை உனக்குத் தருவேன்' என்று சக்தி தேவியே கூறும் வகையில் அமைந்துள்ளது ஐஸ்வர்யக் கோலம்.



சக்தியின் ரூபமான லக்ஷ்மியை மட்டும் அல்ல; ஈஸ்வரனின் கோலத்தையும் நமக்குக் காட்டுகின்றது ஈ(ஐ)ஸ்வர்யக் கோலம். அந்தக் கோலத்திலுள்ள முக்கோண நாற்கோணங்கள் ஒன்றுக்குள் ஒன்று அடங்கியுள்ளதன் சூட்சுமம் அதுதான்.

ஐஸ்வர்யக் கோலத்தின் அமைப்பிலுள்ள ஈஸ்வர்யத்தன்மை என்ன?


மேலும், கீழும் (ஆகாயம் முதல் பாதாளம் வரை) சிவசக்தியாக ஈஸ்வரர் நின்றிருக்க, இருபுறமும் மற்ற இருமூர்த்திகளான பிரம்மாவும், விஷ்ணுவும் தத்தம் பத்தினிகளுடன் நிற்பதைக் குறிப்பது அது.

அவர்களைச் சுற்றி கங்கை, காவேரி, யமுனை, நர்மதா, கோதாவரி மற்றும் கிருஷ்ணா போன்ற புண்ணிய நதிகளின் தேவியர் பக்தர்களுக்கு சக்தியையும், செல்வ வளத்தையும், மனதில் தூய்மையையும் தந்தவண்ணம் உள்ளனர்.

சக்தியைக் காத்து நிற்கும் பன்னிரண்டு பரிவார யோகினிகள், தேவி சந்நிதியின் துவாரபாலர்களான தெய்வங்கள், காவல் தெய்வங்கள், காமேஸ்வரி, மோதினி, விமலா போன்ற எட்டு சித்திகளைக் கொண்ட எட்டு ஆவரண தேவதைகள், சந்திரன், சூரியன் ஆகியோரும் இந்தக் கோலத்தில் அடங்கியுள்ளனர்.

ஐஸ்வர்யக் கோலத்தைப் பிரார்த்திக்கும் முறை

பூஜையறையில் அல்லது வேறு எந்த இடத்திலும் ஐஸ்வர்யக் கோலப் படத்தை மாட்டி வைத்து, அதன்முன் நெய் விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும். பௌர்ணமியில் வேண்டுதலைத் துவக்கி, அமாவாசை, அடுத்த பௌர்ணமி, மீண்டும் அடுத்த அமாவாசைக்கு முதல் நாளன்று வேண்டுதலை முடிக்கும்பொழுது 45 நாட்கள் ஆகிவிடும். வேண்டுதல் முடிந்த மறுநாள் முதல் தேய்பிறைபோல நம்முடைய பிரச்சினைகள் மறையத் துவங்கும்.

பௌர்ணமியன்று நம் பிரார்த்தனையை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து, அந்தக் காகிதத்தினால் ஐஸ்வர்யக் கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு, சாமி பீடத்தில் ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும்.

அதன்பின் ஒரு நெய்விளக்கை ஏற்றி, ஐஸ்வர்யக் கோலத்திற்குமுன் அதைக் காட்டிவிட்டு (கற்பூர தீபாராதனை போல) சாமியறையில் வைத்துவிட வேண்டும். ஹாலில் மாட்டப்பட்ட படத்திற்கும் அதைச் செய்யலாம்.

பிறகு நமக்குத் தெரிந்த லட்சுமி அஷ்டோத்திரம் போன்ற ஏதாவது ஒரு துதியைச் சொல்லி நம்மாலியன்ற ஒரு சிறிய நிவேதனத்தைச் செய்யலாம்.

தொடர்ந்து 45 நாட்களும் இவ்வாறே பிரார்த்தனை எழுதப்பட்டுள்ள  காகிதத்தால் ஐஸ்வர்யக் கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு, நெய் விளக்கை ஏற்றி அதை ஐஸ்வர்யக் கோலத்திற்குமுன் காட்டிவிட்டு வைத்து விடவேண்டும்.

அசௌகர்ய நாட்களிலும் முடியாத தினங்களிலும் வீட்டிலுள்ள வேறு எவர் வேண்டுமானாலும் அதைத் தொடர்ந்து செய்யலாம். ஆலயத்தில் அர்ச்சகர்கள் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்வது போன்றதே இதுவும். அட்சய திரிதியையன்று இப்பூஜையை செய்வது மிகவும் விசேஷம். அன்று மட்டுமோ அல்லது அன்றிலிருந்து தொடர்ந்து 45 நாட்களுக்குமோ செய்யலாம்.

ஐஸ்வர்யக் கோலத்தினால் என்ன பயன்?

இந்தக் கோலத்தை பூஜையறையில் மட்டுமல்ல; வீட்டில் எங்கு வேண்டுமானாலும் மாட்டலாம்.

வீட்டில் செல்வம் பெருகும்; மகிழ்ச்சி தாண்டவமாடும்; மனம் அமைதி பெறும். காவல் தேவதைகள் தீயசக்தி களை வீட்டிற்குள் நுழையவிடாது.


இப்படி பல நன்மைகளும் அந்தக் கோலத்தை முறையாகப் பிரார்த்திப்பவர்களுக்குக் கிடைக்கும். இத்தனை தெய்வங்களும் (தேவதைகளும்) கொலுவிருக்கும் சக்திவாய்ந்த ஐஸ்வர்யக் கோலம், மாட்டக்கூடிய படமாக கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கிக் கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே செய்யலாம். ஐஸ்வர்யக் கோலம் ஸ்டிக்கராகவும் கிடைக்கிறது. அதை வாங்கி கெட்டியான அட்டையில் ஒட்டி அலங்கரித்தும் பூஜிக்கலாம்.











No comments:

Post a Comment